- Home
- Tamil Nadu News
- தமிழகத்தின் தலைநகரே தரங்கெட்ட நகராக மாறிப்போச்சு! திமுகவின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய NARI 2025!
தமிழகத்தின் தலைநகரே தரங்கெட்ட நகராக மாறிப்போச்சு! திமுகவின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய NARI 2025!
சென்னையில் வெறும் 8% பெண்கள் மட்டுமே பாதுகாப்பாக உணர்வதாக NARI 2025 அறிக்கை தெரிவிக்கிறது. திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் தலைநகரே பெண்களை அச்சுறுத்தும் நகராக மாறியுள்ளது என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகமே சீர்குலைந்து கிடக்கிறது
பெண்களைப் பாலியல் படுகுழியில் தள்ளும் கயவர்களைத் தண்டிக்க வேண்டிய காவல்துறை, திமுக அரசின் கட்டளைகளுக்கு அடிபணியும் ஏவல்துறையாக மாறி சேவகம் செய்து கொண்டிருப்பதால் தமிழகமே இன்று சீர்குலைந்து கிடக்கிறது. தேசிய அளவில் அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
வானதி சீனிவாசன்
இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பெண்களின் பாதுகாப்பு குறித்த சமீபத்திய தேசிய ஆண்டு அறிக்கையான NARI 2025 இன் படி, தேசிய சராசரி அளவை விட பெண்களின் பாதுகாப்பில் பின்தங்கியுள்ள 31 நகரங்களில் நமது சென்னை 21-வது இடத்தில் இருப்பதாகவும், வெறும் 8% பெண்கள் மட்டுமே சென்னையில் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளத் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு பெண்களுக்கு ஆபத்தானது என்பதற்கான மற்றொரு அவலச்சான்று இது.
திமுக ஆட்சி
போதைப்பொருட்களும், பயங்கர ஆயுதங்களும் சர்வ சாதாரணமாகிப் போன திமுக ஆட்சியில் எங்கு சென்றாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள். பெண்களைப் பாலியல் படுகுழியில் தள்ளும் கயவர்களைத் தண்டிக்க வேண்டிய காவல்துறை, திமுக அரசின் கட்டளைகளுக்கு அடிபணியும் ஏவல்துறையாக மாறி சேவகம் செய்து கொண்டிருப்பதால் தமிழகமே இன்று சீர்குலைந்து கிடக்கிறது. தேசிய அளவில் அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கிறது.
பெண்கள் பாதுகாப்பு
திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் தலைநகரே பெண்களை அச்சுறுத்தும் தரங்கெட்ட நகராக மாறியுள்ளது என்றால், தமிழகத்தின் கடைகோடி கிராமங்களின் நிலை என்னவாக இருக்கும்? அங்கே வசிக்கும் பெண்களின் மனநிலை எப்படியிருக்கும்? “ஸ்டாலின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றம்” என்ற வெற்று முழக்கத்தின் லட்சணம் இதுதானா? வார்த்தை வன்முறையில் விளையாடும் வித்தகர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் கட்சிப் பதவியில் வைத்திருக்கும் திமுகவின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.