உலகில் அதிகம் தேடப்படும் 4வது செய்தி முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த செய்தியாக உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் முக்கிய நிகழ்வாக வெளியாகி வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தல், இதையடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

தற்போது, உலகின் முக்கிய நிகழ்வுகளில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த செய்தி மட்டுமே முதலிடத்தில் உள்ளது.
தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து ஆட்சியை 2வது முறை பிடித்தும், பல்வேறு சாதனைகள் செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா முதலிடம் வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோ தெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, அவருக்கு இன்று மாலை வரை டாக்டர்கள் கெடு விதித்துள்ளனர். அதன்பிறகே அவரது உடல் நிலையின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.

இதை அறிந்ததும், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையின் முன்பு திரண்டனர். அனைவரும் கண்ணீருடன், பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகி கொண்டு இருக்கிறது. இதனால், உலகில் அதிகம் தேவைப்படும் 4வது செய்தியாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் செய்தியாக உள்ளது.
