ஜெர்மனியின் ஊர்செலன் நகரில், வேலைப் பளு காரணமாக 10 நோயாளிகளுக்கு ஊசி போட்டுக் கொலை செய்த ஆண் நர்ஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஜெர்மனியின் மற்றொரு கொடூர நர்ஸ் நீல்ஸ் ஹோஜெல் வழக்கை நினைவுபடுத்துகிறது.

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஊசி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக ஆண் நர்ஸுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இவர் 2020ஆம் ஆண்டில் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். இரவு நேரப் பணியில் இருந்தபோது, தனக்கு வேலைப் பளு அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

2023 டிசம்பர் முதல் 2024 மே வரை, இவர் 10 நோயாளிகளைக் கொலை செய்துள்ளார். மேலும், 27 பேரைக் கொல்ல முயற்சி செய்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பும் மேல்முறையீடும்

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வழக்கு, ஆச்சன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நர்சுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த ஆயுள் தண்டனையில், அவர் 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த மற்ற நோயாளிகளின் உடல்களைத் தற்போது தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம், அவர் மேலும் பல கொலைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீல்ஸ் ஹோஜெல்

ஜெர்மனியின் வரலாற்றில் மிகவும் கொடூரமான கொலைகாரர் என்று கருதப்பட்ட நீல்ஸ் ஹோஜெல் என்ற ஆண் நர்ஸ், 2019ஆம் ஆண்டில் தண்டனை பெற்றார். இவர் 1999 முதல் 2005 வரை வடக்கு ஜெர்மனியில் உள்ள 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, அதிக டோஸ் மருந்துகளைக் கொடுத்து 85 நோயாளிகளைக் கொலை செய்தார். இந்தக் குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனை பெற்றார்.

ஹோஜெலுக்குப் பிறகு மீண்டும் மற்றொரு நர்ஸின் கொடூரமான கொலை வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.