பாபர்மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, உமா பாரதி, ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நடவடிக்கை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 9 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதிகரசேவர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக எல்.கே.அத்வானி(வயது89), முரளிமனோகர் ஜோஷி(வயது 83), உமாபாரதி(வயது57), சம்பத் ராய் பன்சால், சதீஸ் பிரதான், தரம் தாஸ், மகந்த் நிர்தியாகோபால் தாஸ், மகாமதலீஸ்வர் ஜகதீஸ் முனி, ராம்விலாஸ் விதாந்த், வைகுண்ட் லால் சர்மா, சத்தீஸ் சந்திரா உள்ளிட்ட 21 மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதை விசாரணை செய்த லக்னோ விசாரணை நீதிமன்றம் இவர்களை கடந்த 2001ம் ஆண்டு விடுவித்து தீர்ப்பளித்தது. இதை தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றமும் 2010ம் ஆண்டு உறுதி செய்தது.
மற்றொரு வழக்கு பாபர் மசூதியை இடித்தது தொடர்ாககரசேவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு ரேபரேலிநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிலும் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், ரேபரேலி வழக்கையும், லக்னோ நீதிமன்றத்திலேயே சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. மேலும், 2 ஆண்டுகளுக்குள் தினந்தோறும் வழக்கை நடத்தி விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து பாபர்மசூதி இடிப்பு வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கி நடந்து வந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மகந்த் நிரிதயா கோபால் தாஸ், மகந்த் ராம் விலாஸ் வேதாந்தி, கைகுந்த் லால் சர்மா , சம்பந்த் ராய் பன்சால், மந்த் தர்மா தாஸ், சதீஸ் பிரதான் ஆகியோ கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றனர். இவர்கள் அனைவரின் பெயரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோரை இம்மாதம் 25, 26-ந் தேதிகளில் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர்கள் ஆஜராகாததையடுத்து, 30-ந்தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நேற்று லக்னோ வந்தார். அவர் முதல்வர் ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசியபின், அரசின் விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த பின் நீதிமன்றம் சென்றார்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி மூத்த தலைவர் அத்வானி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை நீதிபதி எஸ்.கே.யாதவ் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியார், வி.எச்.பி. விஷ்னு ஹரி டால்மியா உள்ளிட்ட 9 பேர் மீதும் ஐ.பி.சி. 120 பி சதித்திட்டம் தீட்டுதல் பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
6 பேருக்கு சொந்த ஜாமீன்....
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் உமாபாரதி, மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியார், வி.எச்.பி. விஷ்னு ஹரி டால்மியா, உள்ளிட்ட 6 பேருக்கும் ரூ. 50 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமினில் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டார்.