அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ந் தேதி புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே பல அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியுரிமை கட்டுப்படுத்தப்படும் எனவும், வெளி நாட்டினருக்கு அமெரிக்க வேலைவாய்ப்புகள் தடுக்கப்படும் எனவும் கூறி இருந்தார்.
அதன்படி அவர் பதவி ஏற்றதுமே வெளிநாட்டினருக்கு எதிராக பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் கடும் சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் சட்ட விதிகளை மீறி குடியிருப்பவர்கள், உரிய ஆவணமின்றி குடியிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
மேலும் அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் மிக சிறிய தவறுகள் செய்தால் கூட அவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை இதுவரை நாட்டை விட்டு வெளியேற செய்யாமல் விதிமுறைகளை தளர்த்தி அங்கேயே தங்க வைத்திருந்தனர்.
இப்போது இதுபோன்ற நபர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உரிய ஆவணம் இல்லாமல் 3 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. டிரம்ப் நடவடிக்கையால் அவர்களும் வெளியேற்றப்பட உள்ளனர்.
மேலும் சிறு குற்றங்கள் செய்தாலும் வெளியேற்ற வேண்டும் என்று கூறுவதால் அதிலும் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் கலக்கத்தில் உள்ளனர்.
