வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகளை பார்த்த மக்கள் நாம் கண்ட காட்சி உண்மைதானா? இல்லை வேறு ஏதும் கற்பனை உலகமா? என தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று (பிப்ரவரி 1) இரவு வானத்தில் 4 நிலவுகள் தோன்றின. இதைப்பார்த்து அதிசயித்த மக்கள் நாம் கண்ட காட்சி உண்மைதானா? இல்லை வேறு ஏதும் கற்பனை உலகமா? என ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர். வானில் 4 நிலவுகள் தோன்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
வானில் 4 நிலவுகள்
வானில் ஒரே ஒரு சந்திரன் மட்டுமே இருக்கும் நிலையில் 4 நிலவுகள் எப்படி தோன்றின? என அனைவரது மனதிலும் கேள்வி எழுந்தது. வானில் 4 நிலவுகள் இருப்பது போன்று தோன்றுவது ஒரு மாயத்தோற்றம் (Optical Illusion) என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய நிகழ்வு பாரசெலீன் (Paraselene) அல்லது மூன் டாக் (Moon Dog) என்று அழைக்கப்படுகிறது.
4 நிலவுகள் என்பது உண்மையா?
4 நிலவுகள் தோன்றிய இந்த பாரசெலீன் நிகழ்வு என்பது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். சிர்ரஸ் (Cirrus) மேகங்களில் உள்ள பனிப் படிகங்கள் வழியாக நிலவொளி ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் ஒளிவிலகலால் இத்தகைய போலி நிலவுகள் உருவாகின்றன என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் (NASA) கூற்றுப்படி இவை நிலவிலிருந்து 22 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட கோணத்தில் காணப்படுகின்றன. நிலவு அடிவானத்திற்கு அருகில் தாழ்வாக இருக்கும்போது, இந்த மங்கலான போலி நிலவுகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்று கூறப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?
இந்த போலி நிலவுகள் உண்மையான நிலவு இருக்கும் அதே உயரத்தில் தோன்றும். பனிப் படிகங்களின் அளவைப் பொறுத்து இவற்றின் நீளம் மாறுபடும்; பெரிய படிகங்கள் நீண்ட போலி நிலவுகளை உருவாக்குகின்றன என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


