திமுகவினரின் வடை பிரச்சாரம்.. போட்டியாக பாஜகவினரின் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சாரம் - வீடியோ இதோ!
Coimbatore BJP : பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் வாயிலேயே வடை சுடுகிறார் எனவும் கூறி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வடை வழங்கி மோடி சுட்ட வடை என்ற நூதன பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக சார்பில் திமுகவிற்கு பதிலளிக்கும் வகையில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. சிவானந்தா காலனி பகுதியில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமூடியுடனும் திரண்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அப்போது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும், பொதுமக்களுக்கு வாழைபழத்தை கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்ததால் கொண்டு வந்திருந்த பழங்களை மக்கள் சார்பில் அவர்களே சாப்பிட்டு கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.