புதுச்சேரி மாநிலத்தில் 237 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை - தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் பேட்டி!
புதுச்சேரி மாநிலத்தில் 237 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் ஆண் வாக்காளர்கள் 4,79,329 பேரும், பெண் வாக்காளர்கள் 5,41,437 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 148 பேர் உள்ளதாக தெரிவித்தார். மேலும் முதல்முறை வாக்காளர் 28,403 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் எனவும் மொத்தமுள்ள 967 வாக்குச்சாவடிகளில் 237 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் பணியில் 6 ஆயிரம் அரசு ஊழியர்களும், 4,745 போலீசாரும், 12 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் (1,100) பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.