WhatsApp ஸ்கிரீன் மிரரிங் மோசடி மூலம் மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். அறியாத எண்களிலிருந்து வரும் வீடியோ கால்களைத் தவிர்த்து, உங்கள் ஸ்கிரீனை யாருடனும் பகிர வேண்டாம்.
ஆன்லைன் மோசடிகள் தினமும் புதிய வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த புதிய மோசடி "WhatsApp Screen Mirroring Fraud" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடியில் சிக்கினால், ஒரே ஒரு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாகவே உங்கள் வங்கி கணக்குகள் காலியாகி விடும் அபாயம் உள்ளது.
இந்த முறையில், மோசடி செய்பவர்கள் தங்களை வங்கி ஊழியர்கள் அல்லது நிதி சேவை நிறுவன ஊழியர்களாகக் காட்டி, “உங்கள் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளது” அல்லது “நீங்கள் பரிசு வென்றுள்ளீர்கள்” என்று கூறி, ஸ்கிரீன் பகிர்ந்து கொள்ள வற்புறுத்துவார்கள். பயணி ஸ்கிரீனை பகிர்ந்தவுடன், OTP, கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற அனைத்தையும் நேரடியாக பார்த்து விடுவார்கள்.
சில நேரங்களில், அவர்கள் வீடியோ கால் மூலம் ஒரு டியூட்டோரியல் காட்டுகிறோம் என்று சொல்லி, ஒரு கோடு அல்லது லிங்க் அனுப்புவார்கள். அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தாலோ, கோடு பயன்படுத்தினாலோ, அவர்களின் தொலைபேசியை முழுமையாகக் கட்டுப்படுத்தி, UPI, கார்டு, இ-வாலெட் உள்ளிட்ட நிதி விவரங்களைப் பெறுவார்கள். இதன் மூலம், கணக்கிலிருந்து உங்கள் அனுமதி இல்லாமலே பணத்தை எடுத்துச் செல்வார்கள்.
நீங்கள் இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, அறியாத எண்களிலிருந்து வரும் வீடியோ கால் எதையும் எடுக்க வேண்டாம். மேலும், யாரிடமும் உங்கள் ஸ்கிரீனை பகிர வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். இதுபற்றி நிபுணர்கள் கூறுவதாவது, “அனைத்து நிதி செயலிகளிலும் இரண்டு நிலை பாதுகாப்பு (டூ ஸ்டெப் அங்கீகாரம்) கட்டாயம் செயல்படுத்த வேண்டும்.
இதனால் OTP, CVV, PIN போன்ற தகவல்களை மோசடி செய்பவர்கள் பெற்றாலும் உடனடியாக பணத்தை பறிப்பது கடினமாகிவிடும். ஒரு சிறிய தவறினால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிலை வராமல் இருக்க, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
