Exports 2025-ல் இந்தியா ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் அரிசி உற்பத்தியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டமான 'மேக் இன் இந்தியா' (Make in India) முயற்சியில் இந்தியா மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ. 4.51 லட்சம் கோடி மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்களை (Apple iPhones) ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் அசுர வளர்ச்சி
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 6 மடங்கும், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 8 மடங்கும் அதிகரித்துள்ளதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை அறிவித்தார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திலும், உற்பத்தியாளர் பொருளாதாரமாக மாறுவதற்கான நமது பயணத்திலும் இது ஒரு முக்கிய மைல்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சாம்சங் மற்றும் ஆப்பிள் ஏற்றுமதி நிலவரம்
2025-ல் ஆப்பிள் நிறுவனம் ரூ. 4.51 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளையில், 2021-2025 நிதியாண்டுக் காலத்தில் சாம்சங் நிறுவனம் ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.
அரிசி உற்பத்தியில் சீனாவையே பின்னுக்குத் தள்ளிய இந்தியா
மறுபுறம் விவசாயத் துறையிலும் இந்தியா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 15 கோடி டன் அரிசியை உற்பத்தி செய்து, சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உலக சந்தையில் இந்தியாவின் ஆதிக்கம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சவுகான், "சீனா 14 கோடி டன் அரிசியை உற்பத்தி செய்த நிலையில், இந்தியா 15 கோடி டன்களை உற்பத்தி செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியா இப்போது வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் அரிசியை விநியோகித்து வருகிறது" என்று பெருமிதத்துடன் கூறினார்.


