மும்பையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி, சைபர் மோசடிக்காரர்கள், வயதான பெண் ஒருவரிடம் ரூ. 22 லட்சம் மோசடி செய்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி, சைபர் மோசடிக்காரர்கள், வயதான பெண் ஒருவரிடம் ரூ. 22 லட்சம் மோசடி செய்துள்ளனர். டெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற உளவு குற்றச்சாட்டைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு மும்பையின் கிர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர் கடந்த வாரம் தெற்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்படி, இந்த மாத தொடக்கத்தில் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து அவருக்கு மூன்று அழைப்புகள் வந்துள்ளன.
அழைத்தவர் தன்னை டெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரி பிரேம் குமார் குப்தா என்றும், ஜம்மு காஷ்மீர் எல்லை காவல் நிலையத்தில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மோசடிக்காரர் மூதாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், உளவு பார்த்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார். தனது அடையாள அட்டை புகைப்படத்தையும் அனுப்பி, தான் கூறுவது உண்மை என்பதை நம்ப வைத்துள்ளார்.
கைது செய்யப்படுவோமோ என்று பயந்த மூதாட்டி, ஜூன் 5 முதல் 10 வரை மோசடிக்காரரால் வழங்கப்பட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ. 22.4 லட்சம் செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்திய பிறகு, மூதாட்டிக்கு தொலைபேசி அழைப்புகள் வருவது நின்றுவிட்டன, அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
ஜூன் 13 அன்று தெற்கு மண்டல சைபர் போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
