Asianet News TamilAsianet News Tamil

சந்திரயானுக்குப் பிறகு சமுத்திரயான்! ஆழ்கடலை ஆய்வு செய்யும் திட்டத்துடன் இந்திய விஞ்ஞானிகள்!

மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் தாதுக்களை ஆராய்வதற்காக சமுத்திராயன் மத்ஸயா 6000 என்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலுக்கு அனுப்பப்பட உள்ளது.

After Chandrayaan, it's Samudrayaan: Scientists ready Matsya 6000 submersible for deep-sea exploration
Author
First Published Sep 11, 2023, 8:20 PM IST

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான நிலவுப் பயணத்தைத் தொடர்ந்து இந்திய விஞ்ஞானிகள் இப்போது சமுத்திராயன் எனப்படும் ஆழ்கடல் ஆய்வு முயற்சிக்கு தயாராகி வருகின்றனர். கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் தாதுக்களைத் தேடுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் 6,000 மீட்டர் நீருக்கடியில் மூன்று நபர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மத்ஸ்யா 6000 என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடாவில் அதன் முதல் கடல் சோதனை நடத்தப்பட உள்ளது. கடந்த ஜூன் மாதம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் போது மாயமானதன் விளைவாக, விஞ்ஞானிகள் மத்ஸ்யா 6000 இன் வடிவமைப்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சர்டிபிகேட் தொலைஞ்சுருச்சா! கவலையை விடுங்க... ஆன்லைனில் எளிதாக டவுன்லோடு செய்யலாம்!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) எனப்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், மத்ஸ்யா 6000 ஐ உருவாக்கியுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு, சோதனை நடைமுறைகள் உள்ளிட்ட பலவற்றை சோதிக்கும் வகையில் விரிவான சோதனைகளை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.

இத்திட்டம் பற்றி புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ரவிச்சந்திரன் கூறுகையில், "ஆழ்கடன் ஆய்வின் ஒரு பகுதியாக சமுத்திரயான் பணி நடந்துவருகிறது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 500 மீட்டர் ஆழத்தில் கடலில் சோதனை நடத்துவோம்" என்றார்.

இந்தப் பணி 2026-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பு்ம் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கல், கோபால்ட், மாங்கனீசு, ஹைட்ரோதெர்மல் சல்பைடுகள் மற்றும் வாயு ஹைட்ரேட்டுகள் போன்ற மதிப்புமிக்க தாதுக்களைத் தேடுவது மத்ஸ்யா 6000 இன் முக்கியப் பணியாகும் என்று கூறப்படுகிறது. பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடலில் மீத்தேன் கசிவுகளை ஆராய்வதும் இதன் பணிகளில் இடம்பெற்றுள்ளன.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ஏ.ராமதாஸ் கூறுகையில், "மத்ஸ்யா 6000 2.1 மீட்டர் விட்டம் கொண்டது. மூன்று நபர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,000 மீட்டர் ஆழத்தில் 600 பார் அளவுக்கு அபரிமிதமான அழுத்தத்தைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 96 மணிநேர ஆக்சிஜன் சப்ளையுடன், 12 முதல் 16 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் வகையில், நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

ஏ.டி.எம். பின் நம்பர் மறந்துவிட்டதா? ஈசியாக புதிய பின் நம்பர் பெற இரண்டு வழிகள் இருக்கு!

Follow Us:
Download App:
  • android
  • ios