ஆன்லைன் சூதாட்டம்..! பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு இளைஞர் தற்கொலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சல்மான் என்ற 22 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்- தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நாளுக்கு நாள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக அரசு ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடையை விலக்கியது. இதனையடுத்து புதிதாக பதவியேற்ற திமுக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தது. இதனையடுத்து அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக சட்ட மன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்க்கு ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் இளைஞர் தற்கொலை
இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநரிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் உள்ளார். இந்தநிலையில் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் சல்மான் என்பவர், தனது நண்பர்களிடம் பணத்தை கடனாக பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டில் பணத்தை முழுவதுமாக இழந்த நிலையில் விரக்தி அடைந்த சல்மான் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்