சவூதியிலிருந்து அரசின் கடனை அடைக்க தனது பங்காக ரூ. 90 ஆயிரம் அனுப்பிய தமிழர்.. நன்றி தெரிவித்து அரசு கடிதம்
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த சின்னராஜா செல்லதுரை என்பவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,” நான் தற்போது சவுதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிகிறேன். பொருளாதாரமும் படித்து வருகிறேன். 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் செய்தி மூலம் அறிந்தேன். அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதன்படி கணக்கிட்டால், ஒவ்வொரு தமிழன் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் ரூ.90 ஆயிரத்து 558 ஆக உள்ளது. இதை அறிந்து நான் அதிக வருத்தம் அடைந்தேன். எனவே தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மேலும் படிக்க:”ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை”.. ஜவுளிக்கடையில் அலைமோதிய பெண்கள் கூட்டம்.. எங்கு தெரியுமா..?
அதனால், கடந்த 6 மாதங்களாக ரூ.90 ஆயிரத்து 558-ஐ சேமித்து வைத்தேன். தற்போது அந்த தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தமிழக அரசின் கடனை செலுத்துவதற்கு எனது பங்களிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாடு ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அதில் கூற்ப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக அரசு இந்த தொகையை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக நிதித்துறை இணைச் செயலாளர் எழுதிய பதில் கடிதத்தில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நீங்கள் அனுப்பி வைத்த மதிப்பு மிக்க உங்கள் பங்களிப்புக்காக நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும் படிக்க: இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்