காதலர்களுக்கு இடையே நடந்த சண்டையில், இளம் பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநர் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக இருந்து வருகிறார் அந்த நிறுவனத்தில், தருமபுரியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், ஏற்காடுக்கு டூர் போக அவர்கள் முடிவு செய்தனர்.வாசுதேவன், தனது காதலியை ஏற்றிக் கொண்டு ஏற்காடு சென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் தங்கிய அவர்களுக்கு, சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவன், நட்டநடு ராத்திரியில், ஓட்டலை விட்டு வெளியேறினார். 

செய்வதறியாது திகைத்த அந்த இளம் பெண், அண்ணா பூங்கா அருகே ரோட்டில் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார், கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர். வாசுதேவனிடம் ஏற்பட்ட கோபம் காரணமாக, நடந்தவற்றை, அவர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். 

இந்த நிலையில், காதலி கோபித்துக் கொண்டு எங்கு போனாளோ என்று பதறிய வாசுதேவன், அவரைத் தேடிச் சென்றார். அப்போது, டிரைவர்களிடம் காதலி பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அவர்களிடம் சென்று, அந்த பெண்ணிடம் என்ன பேச்சு என்று கேட்டார். அப்போது, அந்த இரு டிரைவர்களும் வாசுதேவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வாசுதேவன் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

மேலும், வாசுதேவன் அணிந்திருந்த வாட்ச், செயின், மோதிரம், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். அந்த பெண்ணையும் ஆட்டோவில் கடத்தி சென்றனர். பாதி வழியில், கார் டிரைவர் ஆரோக்கியதாஸ் இறங்கிக் கொண்டார். விஜயகுமார், அந்த பெண்ணுடன் ஆட்டோவில் சென்றார்.

படுகாயமடைந்த வாசுதேவன், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறினார். காதலி கடத்தி செல்லப்பட்டதாகவும் அவர் புகார் செய்தார். 

வாசுதேவனின் புகாரை அடுத்து, போலீசார் உடனடி விசாரணையில் இறங்கினார். ஏற்காடு முழுவதும் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களை சல்லடைபோட்டு தேடி கண்டுபிடித்தனர். இளம் பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர் விஜயகுமார், தனக்கு தெரிந்து ஓட்டல் ரூம் ஒன்றில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.