குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.! கைரேகை இல்லைனா கவலைப்படாதீங்க.! அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !
பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.
இதனிடையே இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து, சட்டப்பேரவையில் உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது விளக்கமளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ‘இந்திய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளின் ஆதார் எண், விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின் பொருட்கள் வழங்கப்படுகிறது. விரல் ரேகை சரிபார்ப்பு என்பது வயது முதிர்வு போன்ற காரணங்களால் தோல்வி அடையும் போது, கையெழுத்துப்பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்படுகிறது. 98.23% விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் இருக்கிறது. கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத்திட்டமாக நகரப்பகுதிகளில், ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்படும்’ என்று கூறினார்.