Woman drinking poisoned and came to give petition to the judge
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில், விஷம் குடித்துவிட்டு மனு கொடுக்க வந்த பெண், நீதிபதி முன்பு மயக்கம்போட்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் மேல்பிரிவு பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் முருகானந்தவள்ளி (35).
நேற்று வால்பாறையில் உள்ள நீதித் துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த அவர், "என்னை யாரோ ஒருவர் செல்போனில் அழைத்து அடிக்கடி மிரட்டுகிறார். இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன்.
எனவே, இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விஷம் குடித்துவிட்டு வந்துதான் இந்த மனுவை கொடுக்கிறேன்" என்று கூறி நீதிபதியிடம் மனுவை கொடுத்தார்.
பேசிக் கொண்டிருக்கும்போதே முருகானதவள்ளி, திடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே நீதிபதி ஆறுமுகம், அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தினார். அங்கிருந்த ஊழியர்கள் அந்த பெண்ணை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனையில் முருகானந்தவள்ளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகானந்தவள்ளியை நீதிபதி நேரில் சென்று பார்த்து விசாரித்தார். அவர் கொடுத்த மனுமீது விசாரணை நடத்தவேண்டும் என்று வால்பாறை காவலாளர்களுக்கு உத்தரவிட்டார். தற்போது இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
