இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கண்காணிக்க நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்புப் பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கண்காணிக்க, தமிழ்நாட்டிற்குச் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக (Special Roll Observers) நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இது குறித்துத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ.ஆர். பணி: சிறப்புப் பார்வையாளர்கள்
டெல்லியில் உள்ள கூட்டுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராமன் குமார், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் குல்தீப் நாராயண், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்குச் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் கர்வால், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்குத் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விஜய் நெஹ்ரா, ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்வையாளர்களின் பணி
இந்தச் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அனைத்துக் கட்டங்களையும் முழுமையாகக் கண்காணிப்பார்கள். கணக்கீட்டு கட்டம், உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம், அறிவிப்பு கட்டம் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இவர்கள் கண்காணிப்பார்கள்.
அத்துடன், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவதையும், தகுதி வாய்ந்த எவரும் விடுபடக் கூடாது மற்றும் தகுதியற்ற எவரும் சேர்க்கப்படக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கை உறுதி செய்யப்படுவதையும் இவர்கள் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


