நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்கள் யார் யார்? பட்டியலை தயார் செய்கிறது உளவுத்துறை! இன்னொரு துப்பாக்கி சூடா இருக்குமோ?
தேனி
நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்கள் யார்? யார்? அவர்களின் விவரங்கள் என்னென்ன? போன்றவற்றை சேகரிக்கும் பணியில் மத்திய, மாநில உளவுத்துறை காவலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றனர். ஏராளமானோர் படுகாயங்கள் அடைந்து இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்ப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று காவலர்கள் முதல் முதலமைச்சர் வரை கூறிவருகின்றனர். போதாது என்று ஹெச்.ராஜா, அர்ஜீன் சம்பத், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இதையே கூறுகின்றனர்.
இது போராடியவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று போராட்டத்தில் காயமடைந்தவர்கள் கொதிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்தை எதிர்த்தும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு மட்டுமே. வளங்களையும், மக்களையும் அழிக்கும் எந்த திட்டமும் வேண்டாம் என்பதே மக்களின் பிரதான கருத்து.
வரும் காலங்களில் நியூட்ரினோ ஆய்வு மையத்தையும் எதிர்த்து வலுவான போராட்டங்கள் நடத்த வாய்ப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்ப சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் தூத்துக்குடி சம்பவத்தையும், தேனி நியூட்ரினோ திட்டத்தையும் ஒப்பிட்டு பல மீம்ஸ்களும், பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.
இதனால், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டால் தேனி மாவட்டத்திலும் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நியூட்ரினோ திட்டத்தை எந்ததெந்த அமைப்புகள் எல்லாம் எதிர்க்கின்றன? எதிர்ப்பவர்கள் யார்? யார்? அவர்களின் விவரங்கள் என்னென்ன? போன்றவற்றை சேகரிக்கும் பணியில் மத்திய, மாநில உளவுத்துறை காவலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை எதிர்பார்த்ததுபோல தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதை யாரொல்லாம் முன்னின்று நடத்த வாய்ப்பு இருக்கிறது? என்பது போன்ற தகவல்களையும் உளவுத்துறை காவலாளர்கள் திரட்டி வருகின்றனராம்.
அதேபோல, கடந்த 2011-ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய நபர்களின் விவரங்களையும் சேகரித்து, அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற பணிகள் நடப்பதாக உளவுத்துறை வட்டாரத்தில் தெரிவித்தலாம் தூத்துக்குடியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை தேடி தேடி சுட்டது போன்று இங்கேயும் வாயிலேயே குறி வைத்து சுடுவதற்கான திட்டமாக இருக்குமோ? என்றும், போராட்டக்காரர்களை ஒடுக்குவதை விட போராட்டத்தை தூண்டியவர்களை போட்டுத்தள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கையா? என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.