வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - சென்னையில் இன்றும் மழை...!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையின் பல இடங்களில் இன்று காலை மழை பெய்தது.
வங்க கடலில் கடந்த வாரம் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகளால் கனமழை பெய்தது.
இதைதொடர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. நேற்று அது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை அருகே கடல் பகுதியில் நிலவி வந்தது.
இதனால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 2 நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல வெயில் அடித்து வந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, இன்று காலை 8 மணி அளவில் கோடம்பாக்கம், திநகர், வடபழனி, கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 10 நிமிடம் மிதமான மழை பெய்தது.
மேலடுக்கு சுழற்சியால் இன்று இரவு மீண்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவரம் ஆகாமலயே வலுவிழக்கும் எனவும் இருப்பினும் அதன் நகர்வை பொறுத்து தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது