பணமில்லா பரிவர்த்தனை மூலம் நாம் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த ஏமாற்றத்தில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதுதான் முக்கியம் என்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர், பணியாளர்களுக்கான பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் பேசியது:
“இன்றைய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. பணமில்லா பரிவர்த்தனை என்றால் அது நமக்குத் தொடர்பு இல்லாதது என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இத்திட்டம் செல்வந்தவர்களுக்கு மட்டும் எனக் கருதுகின்றனர்.
தற்போது நமது கையில் பணமும், செல்லிடப்பேசியும் இல்லையென்றால் வாழ்க்கையில்லை. செல்லிடப்பேசியில் பணத்தைக் கொண்டுவருவதுதான் இந்தத் திட்டம். மொபைல் வாலட் என்ற திட்டம்தான் இனி வருங்காலத்தில் நிகழப்போகிறது.
இந்த மொபைல் வாலட் பற்றி முழுமையாகத் தொடக்கத்திலேயே அறிந்து கொண்டால் நமக்கு எல்லாம் எளிதாகிவிடும்.
இதில் நன்மையும் இருக்கிறது. தீமையும் உள்ளது. ஆனால் வாழ்வில் எப்போதும் குறைதான் அதிகமாகத் தெரியும்.
செல்லிடப்பேசி மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்பதை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது.
பணமில்லா பரிவர்த்தனை மூலம் நாம் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த ஏமாற்றத்தில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதுதான் முக்கியம். நம்மை ஒருவர் ஏமாற்றுவதற்கு முன் நாம் விழித்து விட்டால் நாம்தான் உண்மையான அறிவாளியாக இருக்க முடியும். ஒரு திட்டம் என்றால் அத்திட்டத்தைப் பற்றி நாம் அறிந்துவிட்டால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது.
இந்த பரிவர்த்தனை என்பது அனைவருக்கும் உரியது. மாற்றம் என்பது மாறாதது என்று சொல்வது உண்டு. ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது.
நாம் பழைமையை மட்டும் நினைத்தால் நம் பணம் நமக்குத் தெரியாமலே எங்கோ போய்விடும் என்றார் துணைவேந்தர்.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ச.முத்துக்குமார் வாழ்த்துரை ஆற்றினார். பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளர் பி.ரவீந்திரன், மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
