தேங்கிய தண்ணி தானா வடியும்... கைத்தறி மணியனின் கணக்குதான் இது...
தேங்கிய தண்ணீ தானா வடிஞ்சிடும்... என்று பகீர் கருத்தைச் சொல்லி அதிரவைத்தார் அமைச்சர் மணியன்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் சுமார் 200 குடிசைகள் நீரில் மூழ்கின. அந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்திருந்தார் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வடகிழக்குப் பருவ மழை பாதிப்பு குறித்தும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பது குறித்தும் அதனை சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேட்டனர்.
அப்போது ஓ.எஸ்.மணியன், இதுவரை பெய்திருக்கக் கூடிய மழையால், சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. இதே மழை தொடர்ந்து கடுமையாக இருக்குமானால், பயிர்களுடைய நிலையைப் பற்றி பின்னர் தான் ஆய்வு செய்ய வேண்டும்... என்று கூறினார்.
முன்னதாக அவர் நாகை மாவட்டம் பழையாறில் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், தேங்கியிருக்கும் தண்ணீர் பின்னர் தானாக வடிந்துவிடும் என்று கூறியதுதான், இப்போதைய விமர்சகர்களின் அவல் மெல்லும் வாய்க்குக் கிடைத்த ஹைலைட்!