எச்சரிக்கை: வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுமாம்…
.
கரூர்
வருகிற டிசம்பர் 31-க்குள் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று கரூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.
வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதன் அவசியம் குறித்து கரூரில் நேற்று சிறப்பு விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர், “கரூர் மாவட்டத்தில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணை வங்கக் கணக்கில் இணைப்பது அவசியம்.
வேலை உறுதித்திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம், பிற துறைகள் மூலம் பயனாளிகளுக்கு தொழிற்கடன்கள், குழுகடன்கள், மானியங்கள் போன்றவை வங்கிகள் மூலம்தான் வழங்கப்படுகிறது.
மேலும் பிறத் தேவைகளுக்கும் வங்கிக் கணக்கு தற்போது மிகவும் தேவையான ஒன்றாகும். வங்கி கணக்கைத் தொடர்ந்து பரிவர்த்தனைச் செய்ய ஆதார் எண்ணை வரும் டிசம்பர் 31-க்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இணைத்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இணைக்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படும். இதுவரை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 65 சதவீதம் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது” என்று அவர் எச்சரித்தார்.
இந்த கூட்டத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உதவிப் பொதுமேலாளர் மணிவண்ணன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஸ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூரத்தி, வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.