சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் விபரீதம் - காளை முட்டி பார்வையாளர் பலி
சிவகங்கை மாவட்டம் எம் புதூரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.இதில் கூட்டத்தில் நின்றிருந்த பார்வையாளர் ஒருவரை காளை முட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் கின்னஸ் சாதனைக்காக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 1000 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்த போது காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது.வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.காளை முட்டியதில் கூட்டத்தில் நின்றிருந்த ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காளை முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.