அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள்; நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை மறியல்...
திருவள்ளூர்
திருவள்ளூரில் அம்பேத்கரின் உருவச் சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்துள்ளது சீத்தஞ்சேரி - திருவள்ளூர் சாலை. இந்த சாலையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சிலர் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்தி உள்ளனர்.
மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் பரந்தாமன் உள்ளிட்ட காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, "சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காவலாளர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.
இதனையடுத்து, சீத்தஞ்சேரியில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் காவலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.