பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே, கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதால் அவற்றை கரைக்கும் போது, நீர் நிலைகள் மாசடையும் என்பதால் விநாயகர் சிலைகளை விற்க அனுமதி போலீசார் மறுக்கின்றனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. எனவே, விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.” என கோரியிருந்தார்.

இந்த மனுவானது தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்கிறார். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் சிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: காங்கிரஸ் வலியுறுத்தல்!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது. சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, மனுதாரரின் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பது இல்லை, எல்லாமே விஷம்தான்; இவ்வகை சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது என்று இரு நீதிபதிகள் அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.