நடிகர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். முன்னாள் எம்எல்ஏக்கள், நீதிபதி, ஐஆர்எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். கொள்கை பரப்புப் பொதுச் செயலாளராக K.G. அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஜி ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் முக்கிய பதவி : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார்.
இந்த நிலையில் தவெக தலைவர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் நீதிபதி, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிகள் இணைந்தனர். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
தவெக கொள்கை பரப்பு செயலாளராக அருண்ராஜ்
இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரத்தையும் வெளியிட்டுள்ளார். அதன் படி,
1. R. ராஜலட்சுமி B.Com., B.L., M.B.A. அவர்கள் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
2. S. டேவிட் செல்வன் B.Com. அவர்கள் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்
3. டாக்டர் A. ஸ்ரீதரன் M.B.B.S., D.A., Ph.D., SRF. அவர்கள் திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
4. டாக்டர் N. மரிய வில்சன் B.Tech., M.B.A., P.hd, அவர்கள் நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர். ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
5. சி .சுபாஷ் B.A.L., LLB., LLM (IND)., LLM (UK)., PGDPM & IR., JAIIB.முன்னாள் நீதிபதி. தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ், சென்னை
கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும் கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
