காய்கறிகள், தேங்காய், பலா மற்றும் வாழைத்தார் படையல் வைத்து நெடுவாசலில் 106-வது நாளாக போராட்டம்…
புதுக்கோட்டை
காய்கறிகள், தேங்காய், பலா மற்றும் வாழைத்தார் படையல் வைத்து ஐட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் நெடுவாசலில் 106-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அப்போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதனப் போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 106-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. அதில், நெடுவாசல் பகுதியில் ஐட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தி இப்பகுதியில் விளையும் பழங்கள், காய்கறிகள், மரம், செடி கொடிகளை அழித்து இப்பகுதியை பாலைவனமாக்கி விடவேண்டாம் என்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் விவசாயிகள் நெடுவாசல் பகுதியில் விளைந்த காய்கறிகள், தேங்காய் மற்றும் பலா, வாழைத்தார் உள்பட பலவகையான பழங்களை எடுத்துவந்து போராட்டக் களத்தில் படையல் வைத்து போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.