போலி இருப்பிட சான்று விவகாரம்; வி.ஏ.ஓ., வட்டாட்சியரை தேடும் படலம் தொடக்கம்...!
கேரள மாணவர்களுக்கு, போலி இருப்பிடச் சான்றுகளை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ. மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தேடும் படலம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பையடுத்து, மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கவுன்சிலிங்கின்போது, கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து கவுன்சிலிங்கில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக மருத்துவ கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து சேர முயற்சித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த நிலையில், போலி இருப்பிட சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ் வழங்கிய விஏஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை காவல் துறையினர் தற்போது தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.