நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் பேராலயம் முதல் கடற்கரை வரை இலட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கங்களை எழுப்பினர்.  

நாகப்பட்டினம் 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் பேராலயம் முதல் கடற்கரை வரை இலட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கங்களை எழுப்பினர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம். உலகப் புகழ் பெற்ற இந்த பேரலாயத்தில் வருடா வருடம் நடக்கும் திருவிழாவை காண பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வழிபட வருவதால் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக இந்த பேராலயம் இருந்து வருகிறது.

இந்த பேராலயத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அது, கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கும் “பசிலிக்கா” என்னும் சிறப்பு அந்தஸ்து இதற்கு உண்டு. இந்தியாவில் பிரம்மாண்ட கட்டிட அமைப்புடன் இருக்கும் ஐந்து கிறிஸ்தவ பேராலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.

செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வேளாங்கண்ணி ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பதினோறு நாள்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பெண்கள் தேரை தூக்க அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர் பவனி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மாதா உருவம் பொறித்த வண்ண கொடியும் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டது.

இந்தக் கொடி ஊர்வலம் தேவாலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக சென்று பின்னர் மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயத்தின் உள்ள 90 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. 

கொடி ஏற்றத்தைக் காண இலட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். பேராலய வளாகம், கடற்கரை என எங்குப் பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் கொடி ஏற்றத்தின்போது 'மரியே வாழ்க' என முழக்கங்களை எழுப்பி அன்னை மரியாளை போற்றினர்.