#Breaking: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு- மாநில தேர்தல் ஆணையம் ..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று மாலை 6.30 மணியளவில் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு கட்சிகளும் விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியதாவது, 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழக அரசுடன், மாநில தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால், ஆயிரக்கணக்கான தெருக்கள் கட்டுப்பாடான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓட்டுப் பதிவுக்கு எப்படி வெளியில் வர முடியும். வேட்பாளர், வாக்காளர், பொது மக்கள் பார்வையில் இருந்து சூழ்நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் ஓட்டு கேட்டு பேரணியாக சென்று விடுவர். ஆனால், உள்ளாட்சி தேர்தலில், வீடு வீடாக வேட்பாளர்கள் வருவர்.அவர்களுடன் ஆதரவாளர்கள் வருவர். வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். பொது மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் இல்லை. மூன்று மாதங்கள் தள்ளி போவதால் எந்த பாதிப்பும் இல்லை. இயற்கை சீற்றம், நோய் தொற்று சூழ்நிலைகளில் தேர்தலை தள்ளி வைக்கலாம். பள்ளி, கல்லுாரி, நீதிமன்றம் மூடியிருக்கும்போது, தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது?இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, தேர்தல் அறிவிப்பை வெளியிட, தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுவோம் என்றார். அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம். மாநில தேர்தல் கமிஷனுக்கு, அவ்வப்போது அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’' என்றார். தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான தடை எதுவும் இல்லாததால், உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவும் அடைவதால், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் இன்று வரும் என தகவல் வெளியாகியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.