Asianet News TamilAsianet News Tamil

மீனவர்கள் கைது: இலங்கையுடன் பேசி வரும் மத்திய அரசு - டிஆர் பாலுவிடம் அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக இலங்கையுடன் தொடர்ந்து பேசி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

Union govt is speaking with sri lanka on tn fishermen issue minister tells to tr baalu smp
Author
First Published Oct 31, 2023, 1:03 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடக் கோரியும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை ஒன்றிய அரசு விரைந்து காண வேண்டுமென்று வலியுறுத்தியும், ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சார்ந்த என்.ஜே.போஸ், பி.சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோருடன் ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை இன்று நேரில் சந்தித்து, முதல்வர் எழுதிய கடிதத்தினை வழங்கினார்.

அக்கடிதத்தில், கடந்த சில மாதங்களாக இதுபோன்று தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெருமளவில் அதிகரித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கவலைபடத் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக,  தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் IND-TN-10-MM-860, IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717 மற்றும் IND-TN-10-MM-717 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28.10.2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள நிலையில், அவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருப்பதை ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நன்கு அறிவார் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்வதாக வேதனையுடன் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு: மீண்டும் ஒரு அவலம்!

எனவே, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எவ்வித காலதாமமுமின்றி, உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரனை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் எழுதிய கடிதத்தினைப் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த   ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் ஏற்கெனவே தங்களது துறைக்கு வந்துவிட்டதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்துள்ளதோடு, இலங்கை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios