"பள்ளி மாணவர்களுக்கு மாறப்போகுது சீருடை" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் குறுந்தகடு வடிவில் கையேடுகள் வழங்கப்பட உள்ளதாகவும், தமிழக கல்வி துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர்.
இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வில் விலக்களிப்பது குறித்து பேசி வருகின்றனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறும் வகையில் அவசர சட்ட நகல், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டதாகவும், 85 சதவீத அரசாணையிலும், தமிழகத்துக்கு சாதகமாக சூழ்நிலை இல்லை என்பதால் நடப்பு கல்வியாண்டில் விலக்கு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீட் தேர்வு விவகாரத்தில் இந்த வார இறுதிக்குள் முடிவு தெரிந்துவிடும் என்றும் நிச்சயமாக நீட் தேர்வில் இருந்தும் தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வு பயிற்சிக்காக தமிழக மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய குறுந்தகடு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் குறுந்தகடு வடிவில் கையேடுகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார். இந்த குறுந்தகட்டில் 54 ஆயிரம் கேள்விகள் இருக்கும் என்றும், 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறுந்தகட்டில் நீட் தேர்வு வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக கல்வி துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் என்றும், அரசுத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு பள்ளிக்கல்வித்துறை உதாரணமாக உள்ளது என்றும் செங்கோட்டையன் கூறினார்.
மேலும், அரசு பள்ளிகளில் 3 வித சீருடைகள் மாற்றம் செய்யப்படும் என்றார். 1 - 5, 6 - 10, 11 - 12 வகுப்பு மாணவர்களுக்கு சீருடை மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.