நாமக்கல்லில் கணக்கில் வராத ரூ.246 கோடி டெபாசிட் - அதிர்ச்சியில் வருமான வரித்துறையினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிராமப் புற வங்கிக் கிளையில் ஒருவர் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்த சம்பவம் வருமான வரித்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பென்ஸ் கார் வாங்க மஞ்சள் பையில் பணம் கொண்டு செல்பவர்கள் தான் இந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்ற சொல்லாடல் வழக்கத்தில் உண்டு. பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கும் இம்மண்டலத்தைச் சேர்ந்தவர்களிடம் கோடிக் கணக்கில் கரன்சிகள் கொட்டிக் கிடக்கும். மேற்கண்ட இவ்வாக்கியங்களுக்கு உயிர் கொடுப்பதாய் அமைந்திருக்கிறது திருச்செங்கோட்டில் நடந்த சம்பவம்.
246 கோடி ரூபாய் டெபாசிட்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை ஒன்றில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் தனிநபர் ஒருவர் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை வருமான வரித்துறையினர் கடந்த 15 நாட்களாக பின்தொடர்ந்து வந்தனர். விசாரணையில் முதலில் மறுத்த அவர், பின்பு மேஜையின் மீது ஆதாரங்களை அடுக்க அமைதியாகி விட்டார்.
சட்டப்படி குற்றம் ஆகாது
கணக்கில் காட்டாததாகக் கூறப்படும் இந்த 246 கோடி ரூபாயை பிரதமரின் பி.எம்.ஜி.கே.ஒய் திட்டத்தின் கீழ் செலுத்தியதால் இப்பண பரிவர்த்தனை குற்றமாக கருதப்படாது. மேலும் மொத்த தொகையில் இருந்து 45 சதவீதம் வரியாக மத்திய அரசு பிடித்தம் செய்து கொள்ளும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத பணத்தில் 25 சதவீதம் மத்திய அரசிடம் 4 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாகவும் வைத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.