மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இருவர் பரிதாபமாக சாவு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் மோனிஷ் குமார் (20), விக்னேஷ்குமார் (23).
மோனிஷ்குமார் சென்னை அம்பத்தூர் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து வந்தார்.
விக்னேஷ்குமார் அம்பத்தூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டிற்கு செல்வதற்காக காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுகொண்டிருந்தனர்.
வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் ஒரகடத்தை அடுத்த பண்ருட்டி பகுதியில் சென்றபோது பைக் நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரையும் ஒரகடம் காவலாளர்கள் மீட்டு திருபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த, விபத்து குறித்து ஒரகடம் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.