கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தவெக கொடி கம்பம், கல்வெட்டு இடித்து அகற்றப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகள் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு விஜய் வந்து சேர்வார் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காலை முதலே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பிரசார பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

காலை முதல் பொதுமக்கள் வந்து சேர்ந்த நிலையில் மாலை 7 மணிக்கு தான் பிரசார பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்தார். சுமார் 10 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 27 ஆயிரம் பேர் கூட்டத்தில் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அருணா ஜகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக காவல் துறையினரின் கைது நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இந்நிலையில், கரூர் மாவட்டம் ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் இந்த நெரிசலில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் விஜயைப் பார்க்க சென்றபோது கூட்டத்தில் சிக்கி, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தக் கிராமம் முழுவதையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனிடையே ஏமூர் கிராமத்தில் விஜய் மீதான விரக்தியில் அக்கட்சியின் கொடி கம்பம் மற்றும் கட்சி தொடர்பான கல்வெட்டு உள்ளிட்டவற்றை ஜேசிபி உதவியோடு இடித்து அகற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மையில் தற்போதைய வீடியோ கிடையாது. மாறாக தமிழகத்தில் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் இருக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின்போது இடித்து தகர்க்கப்பட்ட வீடியோவை சிலர் பொய்யாக பரப்பி வருவதாக தவெக தொண்டர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.