திருச்சி அருகே துறையூர் முருகம்பட்டி கிராமத்தில் தோட்டா தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று காலை 25க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், அங்குள்ள கட்டிடம் இடிந்து விழுந்தது. தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

தகவலறிந்து உள்ளூர் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. 20 பேர் இறந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மற்றவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை.

தற்போது தஞ்சை, திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மீட்பு குழுவினர், மழை நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட மேற்கண்ட பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆனால், இந்த திடீர் வெடி விபத்தால், அனைவரும் இங்கு திரண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.