“பரங்கிமலை அருகே பயங்கரம்” – மின்சார ரயிலில் தொங்கி சென்ற 3 பேர் பரிதாப பலி
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு விரைவு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், சானடோரியம், குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர் உள்பட பல பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலைக்கு செல்வார்கள். மேலும், சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விரைவு மின்சார ரயில் புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள், பயணம் செய்தனர். ரயில் பழவந்தாங்கல் இருந்து பரங்கிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், சிலர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.
அப்போது, தண்டவாளங்களுக்கு இடையே உள்ள கம்பத்தில் மோதி 3 பேர் கீழே விழுந்தனர். இதில், அவர்கள் விழும்போது, அருகில் இருந்த 4 பேரும் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தனர். வேகமாக சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவலறிந்து பழவந்தாங்கல் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தண்டவாளத்தில் கிடந்த 3 சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காகவும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பலியானவர்களில் ஒருவர், பெருங்களத்தூரை சேர்ந்த பிரவீன்ராஜ். துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார் என தெரிந்தது.