பிறை தெரியாததால் நாளை ரம்ஜான் இல்லை…. நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து….
தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி அறிவித்துள்ளதால் நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு இருப்பது. ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வர். புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும்.
இதையடுத்து 30 வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஷவ்வால் பிறை பிறை தெரிவதை தலைமை உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் காஜி அறிவிப்பார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.