சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. SIR தொடர்பாக பாஜகவை துணை முதல்வர் உதயநிதி கடும் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்

இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR என்னும் பெயரில் மத்திய பாஜக அரசு வாக்குத்திருட்டு சதியில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டின.

இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், SIR-க்கு எதிராக முழு வீச்சில் களமிறங்கிய தமிழக அரசு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. SIR-க்கு ஆதரவாக இருப்பதால் அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தவெகவுக்கும் அழைப்பு

அதே வேளையில் திமுக கூட்டணி கட்சிகள், நடிகர் விஜய்யின் தவெக, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலமாக தமிழகத்தில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு அனுமதிக்காது

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, '' சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலமாக தங்களுக்கு பாதகமான வாக்குகளை பாஜக நீக்க முயற்சிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக நினைக்கிறது. S.I.R பணிகள் மூலமாக பீகாரில் என்ன நடந்தது? என்பதை பார்த்தோம். S.I.R என்னும் பெயரில் வாக்குரிமையை திருட தமிழக அரசு அனுமதிக்காது'' என்று தெரிவித்தார்.