மூணாறு,
மூணாறு அருகே ஊரில் பசுமாட்டோடு சேர்த்து ஐந்து கால்நடைகளை அடித்துக் கொன்ற புலியின் நடமாட்டத்தால் ஊர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்துள்ள டாப் டிவிசன் பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளி முருகேசன். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகேயுள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை நேற்று காலைச் சென்று பார்த்தபோது இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
மேலும், பசுமாட்டின் உடலில் நகக் கீறல்கள் இருந்தன. இதனால் பசுமாட்டை, புலி அடித்துக் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் முருகேசன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பசுமாட்டின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பசுமாட்டை புலி தான் அடித்துக் கொன்றது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கால்நடை மருத்துவரின் உதவியுடன் பசுமாட்டின் உடலை பரிசோதனை செய்து பின் புதைத்தனர். புலியின் நடமாட்டம் இருப்பது உறுதியானதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘டாப் டிவிசன் பகுதியில் புலியின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்து கொன்றுள்ளது. அதனை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே, பொதுமக்கள் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனியாக யாரும் செல்ல வேண்டாம்.
புலி நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனே வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.
