மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது; பொதுமக்கள், வனப்பகுதிக்குள் செல்ல தடை...
விருதுநகர்
விருதுநகரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஐயனார் கோவில். ராஜாம்பாறை, கோட்டை மலை, பிறாவடியார் உள்ளிட்ட 11 பீட்டுகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த கணக்கெடுப்பு பணியில் வனவர் குருசாமி, வன ஊழியர், தன்னார்வலர், மலைவாழ் மக்கள் என நான்கு பேர் அடங்கிய குழு ராஜபாளையம், தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதிகளுக்கு சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் முதல் 3 நாட்கள் புலிகள் கால் தடங்கள், எச்சங்கள், உள்ளிட்டவைகளையும், மீதமுள்ள மூன்று நாட்களில் புலிகளின் நேர்கோட்டு பாதையினையும் ஆய்வு செய்வர். பின்னர், புலிகளின் எண்ணிக்கை குறித்து வனச்சரகர் அலுவலகத்தில் அறிக்கையை வழங்குவர்.
இந்த கணக்கெடுப்பு பணி ஆறு நாட்கள் நடைபெறும். இப்பணியினால் பொதுமக்கள், வனப்பகுதிக்குள் செல்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.