தேசியக் கொடியை சிதைப்பவருக்கு கடும் தண்டனை! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
தேசிய கொடியை எரிப்பது மற்றும் சேதப்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தெரிவித்ததுள்ளார். மேலும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதுப்படையூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசியக் கொடிக்கு தீ வைத்து, அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறி அவர் இந்த செயலில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தேசிய கொடியை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுக்கும் வண்ணம் ஆட்சியாளர்கள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொது இடத்தில் தேசிய கொடியை எரித்தல், சேதப்படுத்துபவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கலாச்சார, விளையாட்டு நிகழ்ச்சியில் காகித கொடியைப் பயன்படுத்த ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவுறுத்தி உள்ளார். காகிதத்திலான கொடிகளை நிகழ்ச்சி முடிந்ததும் தரையில் போரக் கூடாது என்றும் கூறினார். தேசியக் கொடிக்கு உரிய கண்ணியத்துடன், கையாள வேண்டும் என்று ஆட்சியர் அன்புச்
செல்வன் கூறியுள்ளார்.