Three government buses confiscated in one day people affected by court order ...

திருநெல்வேலி

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் திருநெல்வேலியில் மூன்று அரசு பேருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் அவதி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விமல்ஜெனு (26). இவர், 25–9–2016 அன்று நாகர்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

இந்த நிலையில், தனக்கு இழப்பீடு கோரி விமல்ஜெனு திருநெல்வேலி 2–வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், "அவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.14 இலட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று அரசு போக்குவரத்து கழகத்திற்கு 21–4–2017 அன்று உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால், இழப்பீட்டு தொகையை போக்குவரத்து கழகம் வழங்காததால், விமல்ஜெனு நிறைவேற்றுதல் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அப்துல்காதர், இரண்டு அரசு பேருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டார்.


இதேபோன்று, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் சந்திரா (56). இவர், 23–3–2016 அன்று அரசு பேருந்து மோதி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அவர் தனக்கு இழப்பீடு கோரி, திருநெல்வேலி 2–வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், அவருக்கு ரூ.7 இலட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு 20–4–2017 அன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் ஒரு அரசு பேருந்தை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ராஜாமுகமது ஆஜராகி வாதாடினார்.

நீதிபதி உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், நாகர்கோவிலுக்கு புறப்பட தயாராக இருந்த மூன்று அரசு பேருந்துகளை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் பேருந்து பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு நாகர்கோவிலுக்கு மற்றொரு அரசு பேருந்து வந்தது. அந்த பேருந்தில் ஏறி பயணிகள் நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர். இந்தச் சம்பவத்தால் புதிய பேருந்து நிலையம் பரபரப்பு அடைந்தது.