தூத்துக்குடி புரட்சி: 46-வது நாளில் குழந்தைகளை களமிறக்கிய மக்கள்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியே ஆகணும்...
தூத்துக்குடி
தூத்துக்குடி 46-வது நாளாக தொடரும் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி குழந்தைகளுடன் அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவாக நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியிலும் நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயகாரமான நோய்கள் பரவுகிறது.
நிலத்தடி நீர் மற்றும் காசு மாசு ஏற்பட்டு வருவதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று 46-வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக பங்கேற்றனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர். அந்த பகுதியில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாதபடி மாசுபடிந்து உள்ளதால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் ஒரு குடம் ரூ.10-க்கு வாங்கி சமையல் செய்தனர்.