பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியதாக ராமதாஸ் அறிவித்தார்.
பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அன்புமணி மீது நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்தார். இந்நிலையில் இன்று சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் திருமண மண்டபம் ஒன்றில் அன்புமணி தலைமையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாமக பொருளாளர் திலகபாமா நீக்கம்
இந்த கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் திலகபாமா பாமக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் மாநில பொருளாளராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார். பாமக கட்சி நிதியை வங்கியில் இருந்து சத்தியபாமா கையெழுத்து போட்டால்தான் எடுக்க முடியும் என்பதால் முன்கூட்டியே ராமதாஸ் அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கினார்.
பொருளாளர் திலகபாமா தொடர்வார்
அடுத்த சில மணிநேரத்தில் அன்புமணி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் பாமகவில் பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை
இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி: பாமகவின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நான் என்று சொல்ல மாட்டேன். நாம் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் நீங்கள் தான் என்னை முறையாக தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுடன் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். பொறுப்புகள் வரும், போகும். ஆனால், உங்களுடைய அன்பும், பாசமும் தான் நிரந்தரம். ராமதாஸ் கொள்கைகளை மனதில் வைத்து தேர்தல் களத்தில் செயல்படுவோம். நிர்வாகிகளை மாற்ற ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி கூறியுள்ளார்.
