பெசன்ட் நகர் முத்தூட் ஃபைனான்சில் கொள்ளை முயற்சி - மேனேஜருக்கு சரமாரி கத்திகுத்து - 10 பவுன் செயினுடன் ஓடிய கும்பலுக்கு வலை
சென்னை பெசன்ட் நகரிலுள்ள முத்தூட் ஃபைனான்சில் கொள்ளையடிக்க நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் , மேனேஜரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்த ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த 10 பவுன் நகையை பறித்துகொண்டு ஓடியது.
சென்னை பெசன்ட் நகரில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு நகைகள் அடகு வைத்து பணம் தரப்படும் . சென்னையில் உள்ள மிகப்பெரிய கிளைகளில் இதுவும் ஒன்று. இங்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகைகளை வைக்கின்றனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் சேகர்.
இன்றும் அவர் வழக்கமான பணியில் இருந்தார். இந்த கிளையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில் இன்று மதியம் 6 பேர் கொண்ட கும்பல் நகை அடகு வைப்பது போல் வந்துள்ளனர். திடீரென அவர்கள் மேனேஜர் அறைக்குள் நுழைந்து லாக்கர் சாவியை கேட்டுள்ளனர்.
அவர் தர மறுக்கவே அவரை அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார் . உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு கள் அடங்கிய டிவிஆரையும் எடுத்து கொண்டு ஓடிவிட்டனர்.
வழியில் நின்றிருந்த ஒரு பெண்ணின் 10 பவுன் செயினையும் அந்த கும்பல் பறித்துகொண்டு ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மேனேஜர் சேகரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பட்டபகலில் வங்கிக்குள் நுழைந்த கும்பல் மேனேஜரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.