தியேட்டர் ஸ்ட்ரைக் வாபஸ் - 4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது!
கேளிக்கை வரி தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் நடத்திய 4 நாள் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது. அரசு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தலா 6 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தைக்கு அமைக்கப்பட்டதை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டது.
மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் திரையரங்குகளுக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழக அரசு சார்பில் 30% கேளிக்கை வரி ரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திரையுலகத்தினர் கடந்த திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகியோருடன் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நான்கு நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இன்று பிற்பகலில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் வேலுமணி அறிவித்தார்.
இந்த பேச்சு வார்த்தையில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் வீரமணி மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரியை நீட்டிப்பதா அல்லது குறைத்து கொள்வதா? அல்லது சினிமா டிக்கெட் விலையை உயர்த்துவதா? என்பது பற்றி பேச இருதரப்பிலும் தலா 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வருவார்கள் எனபதால் 4 நாட்களாக நடந்த திரையரங்கு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.