The wife who killed her husband was arrested

தன்னுடைய கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்து விட்டதால், வெளிநாட்டில் இருந்து திரும்பியவரை கொலை செய்து விட்டு இயற்கை மரணம் என்று நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (42). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ரேகா (35) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள உள்ளனர். இந்த நிலையில், வேலை விஷயமாக வெளிநாடு சென்று மாதக்கணக்கில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அறிவழகனின் மனைவி ரேகாவுக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு வேலைப் பார்த்து வந்த அறிவழகன் எப்போதாவது தன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு செல்வார். இந்த நிலையில் கடந்த வாரம் ஊருக்கு வந்த அறிவழகன், மனைவியின் தொடர்பைக் கண்டுபிடித்து, ஆத்திரத்தில் அடித்துள்ளார். 

ராஜசேகருடனான பழக்கம் கணவனுக்கு தெரிந்து விட்டதால், அறிவழகனை கொல்ல முடியு செய்துள்ளார் ரேகா. இதனைத் தொடர்ந்து ராஜசேகரை வரவழைத்த ரேகா, இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கணவர் அறிவழகன் தூங்கும்போது கழுத்தை நெறித்தும், தலையணையால் முகத்தில் அழுத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர், ராஜசேகர் சென்று விட்டார்.

காலையில் ஒன்றும் நடக்காததுபோல், ரேகா சத்தம்போட்டு அழுதுள்ளார். நன்றாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தவர் ஹார்ட் அட்டாக்கில் செத்துப்போய்விட்டாரே என்று புலம்பியுள்ளார். இதனை அக்கப்பக்கத்தில் இருந்தவர்களும் நம்பியுள்ளனர். ஆனால், அறிவழகனின் உறவினர்கள் பார்தபோது, அவரது கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து, அறிவழகனின் உறவினர்கள், செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அறிவழகனின்
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறிவழகன் இறப்பு குறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ரேகாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வரவே அவரை தனியே அழைத்து துருவி துருவி விசாரித்தனர். தவறான நடத்தைக் குறித்தும், அதை அறிந்த கணவரை, தானும் தனது ஆண் நண்பர் ராஜசேகரும் சேர்ந்து கொலை செய்து, நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ரேகாவையும், ராஜசேகரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.