கணவன் கண் முன் மனைவி பலாத்கார முயற்சி! காப்பாற்றப்போன கணவனுக்கு உருட்டுக்கட்டை தாக்குதல்!
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 4 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மனைவியை காப்பாற்ற முயன்ற அவருடைய கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கினர். பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வேம்பேடு கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கணவருடன் உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
இவர்கள், மெய்யூர் - வேம்பேடு கூட்டுச்சாலையில் கடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திக் கொண்டிருந்த 4 இளைஞர்கள், இந்த பெண்ணைப் பார்த்து கேலி செய்துள்ளனர். இதனால், கணவன் - மனைவி இருவரும் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றனர். ஆனாலும், அந்த இளைஞர்கள், அவர்களை விரட்டிச் சென்றனர். அந்த பெண்ணை சுற்றி வளைத்து பலாத்காரம் செய்ய முயன்றனர். தனது மனைவியை காப்பாற்ற அந்த இளைஞர்களுடன் அவரது கணவர் போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் கணவரைத் தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயம்பட்டு மயங்கி விழுந்தார். இதனிடையே அந்த பெண், அருகில் இருந்த மெய்யூர் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் உதவி கேட்டுள்ளார். அதற்குள் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள், அந்த இளைஞர்களிடம் இருந்து இளம் பெண்ணின் கணவரை காப்பாற்றினர். மேலும் அவர்கள் 4 பேரையும் பிடித்து கட்டி வைத்துள்ளனர். இது குறித்து பெரியபாளையம் போலீசாருக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த இளம் பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகியோரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பின்னர், பொதுமக்களால் கட்டி வைக்கப்பட்டிருந்த 4 பேரையும் மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.